தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







புது பக்கத்துக்கு வந்துடுங்க ப்ளீஸ்

2 கருத்துகள்
மக்களே என்னோட புது ப்ளாக் க்கு வந்துடுங்க. பழைய ப்ளாகில் என்ன செய்தாலும் FOLLOWERS gadget சேர்க்க முடியவில்லை. அதான் புதிய ப்ளாக். வந்துடுங்க :-)

www.kavippakam.blogspot.com

இந்திய ஏர்போர்ட்டுகளில் இமிக்ரேஷன் லொள்ளு

6 கருத்துகள்

சில தினங்களுக்கு முன் "பிரியமுடன் பிரபு" வலைப்பூவில் வந்த ஒரு பதிவு... நம் இந்திய குடிநுழைவு அதிகாரிகள் (இமிக்ரேஷன் அதிகாரி) படுத்திய பாட்டைப்பற்றி நொந்து போய் எழுதியிருந்தார். அதேபோல் எனக்கும் ஒரு அனுபவம் முன்பு ஏற்பட்டது.

இந்தோனேஷியாவிலிருந்து விடுமுறைக்காக ஊர் சென்று விட்டு மீண்டும் சிங்கப்பூர் வழியாக இந்தோனேஷியா திரும்பும் போது.... திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இமிக்ரேஷன் அதிகாரி என்னை அனுமதிக்க மறுத்தார். அதுக்கு அவர் சொன்ன காரணம் என்னிடம் ரிட்டர்ன் டிக்கெட் இல்லை என்பதுதான். நான் இந்தியாவுக்கு விடுமுறை வந்துட்டு மீண்டும் திரும்பி போரேன் என்கிட்ட எப்படி டிக்கட் இருக்கும்னு கேட்டா அதெல்லாம் எனக்கு தெரியாது ரிட்டன் டிக்கெட் இல்லை அனுமதிக்க முடியாதுன்னுட்டார். என்னிடம் இருக்கும் விசாக்களை காண்பித்த போதும் எதையும் கேட்கும் மூடில் அவர் இல்லை.

திருப்பி திருப்பி அவர் சொன்னது நீங்க சிங்கப்பூர் போரீங்க. சிங்கப்பூருக்கு உங்களுக்கு விசிட் விசா மட்டும்தான் இருக்கு. அதனால ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம அனுமதிக்க முடியாதுன்னு சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கிட்டு இருந்தார். என்னிடம் சிங்கப்பூருக்கான multiple entry business visit visa வும் இந்தோனேஷியாவுக்கான stay permit ம் இருந்தது.

அவரிடம் இரண்டையும் காட்டி சிங்கப்பூர் வழியாகத்தான் நான் இருக்கும் இந்தோனேஷிய தீவுக்கு போக முடியும். எனக்கு சிங்கப்பூருக்கு எண்ட்ரி விசாவும் இருக்கு இந்தோனேசியாவுக்கு ஸ்டே பெர்மிட்டும் இருக்கு அப்புறமும் என்ன பிரச்சினைன்னு கேட்டா உடனே சிங்கப்பூர் டூ இந்தோனேசியா கனெக்டிங் ஃப்ளைட் டிக்கட்ட காமிங்கன்னாரு.

அவரிடம் சிங்கப்பூரிலிருந்து ஃப்ளைட் இல்ல ஃபெரியில் போகணும்னு சொல்லி ஃபெரி டிக்கெட்டையும் காமிச்சேன். (நல்ல வேளையாக ஃபெரி டிக்கெட் வைத்திருந்தேன். சாதாரணமாக இங்கு ஃபெரி ஏறும் முன் நாம் பஸ் டிக்கட் எடுப்பது போல் எடுப்பதுதான் வழக்கம்)

டிக்கெட்டில் ஃப்ளைட் டிக்கெட் போல் தேதி நேரம் எல்லாம் குறிப்பிடப் பட்டிருக்காது. ஃபெரி டெர்மினலில் போய் புக் செய்து கொள்ளலாம். அல்லது இணையம் மூலம் புக் செய்யலாம் அதுவும் 3நாட்களுக்கு முன்புதான் செய்ய முடியும். டிக்கெட்டை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார்.

மீண்டும் சந்தேகம்... டிக்கெட்டில் தேதி ஒண்ணும் இல்லை டிக்கட் கன்ஃபார்ம் ஆகும்னு நான் எப்படி நம்பறதுன்னார். அங்கு போய்தான் புக் செய்ய முடியும். அரைமணி நேரத்துக்கு ஒரு ஃபெரி இருப்பதால் முன்கூட்டியே புக் செய்ய அவசியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எனக்கு தெரியாது கன்ஃபர்ம் டிக்கட் இல்லாம அனுப்ப முடியாதுன்னு அடம் புடிச்சார். அதுவரை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்த எனக்கு கோபம் வந்துடுச்சு.

பாஸ்போர்ட்டை வாங்கி பழைய ஸ்டாம்பிங்குகளையெல்லாம் அவரிடம் காண்பித்து ஒருமாசத்துல நாலு தடவையாவது சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில பயணம் செய்துக்கிட்டு இருக்கேன். அங்கயெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல. இங்க மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை? இத்தனைக்கும் என் பாஸ்போர்ட்டில் ECNR ஸ்டாம்பிங் இருக்கு. பொறியியல் பட்டதாரின்னு இருக்கு. அப்புறமும் ஏன் இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு இவ்வளவு பிரச்சினைன்னு கத்த ஆரம்பிச்சதும் இன்னொரு அதிகாரி வந்து தலையிட்டு எல்லாவற்றையும் க்ளியர் செய்து அனுப்பினார்.

இப்போ ஃபெரி டிக்கெட் கையில் இல்லாமல் நான் இந்தியாவுக்கு போவதே இல்லை :-)

இந்தியாவுக்குள் நுழையும் போதும் பிரச்சினைதான். வர்ற ஃபாரினரிடம் வழிந்து எதுவும் பேசாமல் ஸ்டாம்பிங் குத்தி அனுப்பிவிட்டு நம்மிடம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கேள்வி.

என் மாமனார் இறந்து நாங்கள் எல்லோரும் அழுது துடித்து ஊருக்கு வரும் போது இந்த அதிகாரிகள்படுத்திய பாடு... அழுதழுது முகம் வீங்கின எங்களைப்பார்த்து சகபயணிகள் எங்களை க்யூவில் நிற்க வேண்டாம் என அவர்களே முன் வந்து முதலில் அனுப்பினாங்க. இமிக்ரேஷன் அதிகாரியும் பிரச்சினை செய்யவில்லை. ஆனால இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்... இமிக்ரேஷனில் அந்த எம்பார்க்கேஷன் கார்டில் ஸ்டாம்ப் செய்து ஒரு சிறிய ஸ்லிப் தருவார்கள். அதை பதட்டத்தில் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்பிங் செய்த பக்கத்தில் இருந்து எடுத்து கஸ்டம்ஸ் அதிகாரியிடம் பாஸ்போர்ட்டோடு கொடுத்து விட்டோம். அதற்கு அந்த அதிகாரி ஏதோ நாங்கள் உலக மகா குற்றம் செய்தது போல் கத்தி மீண்டும் ஸ்டாம்பிங் பக்கத்தை தேடி அதில் அந்த ஸ்லிப்பை வைத்து தர கத்தினார். அப்படி வைத்து கொடுத்த போது அந்த பக்கத்தை திறந்து எதையுமே பார்க்காமல் அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்துக் கொண்டார். இதைத்தானே நாங்கள் ஸ்லிப்பை மட்டும் எடுத்து கொடுத்தோம். எதற்கு கத்தினார் என்பது புரியாத புதிர். அன்று கேள்வி கேட்கும் மனநிலையில் கூட நாங்கள் இல்லை.

இமிக்ரேஷன் ஆஃபீசர் கஸ்டம்ஸ் ஆஃபிசர்னா பெரிய கொம்பன்னு நினைப்பு. எல்லாத்தையும் முறையா செய்து போறவங்ககிட்டதான் இவனுங்க ஜம்பம் எல்லாம். தீவிரவாதியை மட்டும் கரெக்டா ஃப்ரீயா விட்டுடுவானுங்க!

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்

10 கருத்துகள்



"டெலிஷாப்பிங் செய்யலாமா" பதிவு போட காரணமே பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு டெலிஷாப்பிங் விளம்பரத்தில் மயங்கி ஒரு பொருளை வாங்கி நொந்து போனதால்தான் :-(

அப்போது நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். டெலிஷாப்பிங் விளம்பரத்தில் ஒரு வெஜிடபிள் கட்டருக்கான விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் அது காய் வெட்டும் அழகில் மயங்கி விட்டேன். அந்த வயதில் வரவேண்டிய காதல் மயக்கத்திற்கு விழாமல் அல்ப விளம்பரத்தில் விழுந்துட்டேன் :-(

என் அப்பாவிடம் அடம் பிடித்து எனக்கு அது வேனும்னு சொல்லி அடம்பிடித்து டெலிஷாப்பிங் நிறுவனத்திற்கு போன் செய்து விட்டேன். போன் செய்த அரைமணி நேரத்தில் பொருளும் வீட்டுக்கு வந்து விட்டது. விலை 600ரூபாய்.

அன்றைய சமையல் நாந்தான் செய்வேன்னு சொல்லி அம்மாவுக்கு அன்று கிச்சனில் இருந்து ரெஸ்ட் கொடுத்து விட்டேன். காஷ்மீரி புலாவ் செய்யப்போகிறேன் என்று கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர் வெங்காயம் எல்லாம் தயாராக எடுத்தாச்சு

அடுத்து புது வெஜிடபிள் கட்டரில் காய் வெட்டும் படலம். வெஜிடபிள் கட்டரை மேடையில் ஃபிக்ஸ் செய்ய நினைச்சு அதுக்குள்ள நாபை திருகினால் கட்டர் வெட்கத்தில் நழுவி நழுவி ஓடியது. இது என்னடா கவிக்கு வந்த சோதனைன்னு மேனுவலை எடுத்து படிச்சா கட்டர் வழவழப்பான தரையில் மட்டும்தான் ஒட்டுவாங்களாம். மற்ற தரைன்னா அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.

சரின்னு ஒரு மைக்கா ஒட்டிய ஸ்டூலில் ஃபிக்ஸ் செய்தாச்சு. இப்போ கட்டரின் மேல் பாகத்தை கழற்றணும். அதைப்பிடித்து திருகினா அது வருவேனான்னு அடம் பிடிச்சுது. ஒருவழியா அந்த ரகசியத்தையும் கண்டுபிடிச்சு (பொண்ணுங்க மனசுல மட்டும்தான் ரகசியம் இருக்கணுமா எனக்கும் இருக்கும்ல அப்படீன்னு அது என்னைப் பார்த்து சிரிச்ச மாதிரியே இருந்துச்சு) மேல்பாகத்தை கழற்றியாச்சு.

அடுத்து ப்ளேட் ஃபிக்ஸ் செய்யணும். அதுக்கும் அந்த பாழாப்போன கட்டர் ஒரு ரகசியம் வச்சிருந்தது. குறிப்பிட்ட ஆங்கிளில் வச்சா மட்டும்தான் பொருந்துவேன்னு அடம்புடிச்சுது. அதையும் கண்டு புடிச்சு போட்டு திரும்பவும் மேல்பாகத்தைக் கொண்டு மூடி...

கேரட்டை வச்சு இடது கையால் புடிச்சுக்கிட்டு வலது கையால் ஹேண்டிலை பிடிச்சு
சுழற்றினா... ஹேண்டிலை சுற்ற காலையில் இன்னும் ரெண்டு இட்லி கூடுதலா சாப்பிட்டிருக்கணும். என் பலம் முழுவதும் கொட்டி ஹெண்டிலைச் சுற்றி சுற்றி கேரட்டை வெட்டி முடித்தேன்.

நான் சமையல் செய்ய ஆரம்பித்து ஏறக்குறைய 45நிமிடம் ஆயிடுச்சு. என் அண்ணன் இவ இந்த லட்சணத்துல காய் வெட்டுனா நமக்கு லன்ச்சுக்கு பதில் டின்னர்தான் செஞ்சு போடுவான்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தார். எங்க அப்பா கவி கஷ்டமா இருக்குதானு கேட்டார். ஆமான்னு சொல்ல மனசு இடம் கொடுக்கலை. நாம் சொல்லி அப்பா வாங்கிட்டார். சரியில்லேன்னு சொன்னா நமக்கு கேவலமாச்சே! இல்லப்பா புதுசுல்ல அதான் இப்படி இருக்கு பழகினா சரியாயிடும்னு சொல்லி சமாளிச்சேன்.

ஒருவழியா எல்லாத்தையும் அதிலேயே வெட்டி அருமையா காஷ்மீரி புலாவும் செய்து விட்டேன். அடுத்து கட்டரை க்ளீன்செய்யும் வேலை...

ஒவ்வொரு பார்ட்டையும் கழற்றி கழுவி காயவைத்து மீண்டும் அதை எடுத்து வைத்து...

அன்று மூட்டை கட்டி ஸ்டோர் ரூமில் வைத்ததுதான்... இன்னிக்கும் எனக்காக அங்கேயே காத்துகிட்டு இருக்கு. எங்க அப்பா அதைப் பார்த்து இத எடுத்துக்கோயேண்டான்னு சொல்லும் போதெல்லாம்...இருக்கட்டும்பா நான் இந்தியாவில் வந்து செட்டிலாகும் போது எடுத்துக்கறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு வரை நான் ஏமாந்துட்டேன்பான்னு அப்பாகிட்ட சொல்லலை :-). ஆனா அது மட்டும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நல்லா ஏமாந்தியான்னு கேட்கிற மாதிரியே இருக்கு :-(

ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. அது எப்படி விளம்பரத்தில் நடிக்கறவங்க மட்டும் இதில் ரொம்ப ஈசியா வெட்டுராங்க?

டெலிஷாப்பிங் செய்யலாமா?!

8 கருத்துகள்
எப்போ டிவி பொட்டியை திறந்தாலும் ஏதாவது ஒரு சேனலில் ஒரு வெள்ளைக்கார தாத்தாவும் பாட்டியும் தமிழில் பேசி நம்ம தலையில் மிளகாய் அரைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

வெள்ளைக்கார பாட்டி: இவர்கிட்ட இருப்பது சாதாரண கரண்டி. என்னிடம் இருப்பதோ சூப்பர் பவர் கரண்டி!

சாதாரண கரண்டியால் சமைப்பவர்: சே இந்த கரண்டியால் என்னால் எதுவுமே கிண்ட முடியலை. அல்வா கிண்டினா அகப்பையில் ஒட்டாம சட்டியிலேயே ஒட்டிக்குது. சே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!

வெ.கா.பா: ஆஹா இந்த கரண்டியால் கிண்டுவது எவ்வளவு சுலபம். சும்மா தொட்டாலே போதும் தானே கிளறும். எவ்வளவு சுலபம்!

சா.க.ச: ஆஹ்! என்ன ஆச்சரியம். எவ்வளவு சுலபமா இருக்கு

வெ.கா.பா : ஆமா சுலபம்தான். பழைய கரண்டியெல்லாம் தூக்கிப் போட்டுடுங்க. சூப்பர் பவர் கரண்டியால் அல்வா கிண்டினால் அல்வா சட்டியில் ஒட்டாது. உங்கள் வாயிலும் பையிலும் மட்டுமே ஒட்டும்.

பின்னணியில் ஒரு பெண் குரல்: இதோட விலை வெறும் 9999 ரூபாய் மட்டுமே! இந்த எண்ணில் முதலில் தொடர்பு கொள்பவர்க்கு சூப்பர் பவர் கரண்டியோடு அதை பூட்டி வைப்பதற்கான பெட்டியும் இலவசம். இந்த இரண்டு பொருட்களின் விலை வெறும் 9999 ருபாய் மட்டுமே!

(பின்னே இவ்வளவு விலை கொடுத்து வாங்கி அதை உபயோகிக்க முடியும்னு நினைக்கறீங்க! அதனாலதான் பத்திரமா பூட்டி வைக்க பெட்டியும் தர்றாங்க)

இதையே அந்த அரை மணிநேரமும் திரும்ப திரும்ப சொல்லி நம்மளை கொல்லுவானுங்க இந்த வெள்ளைக்காரனுங்க!

இதைப்பார்த்த நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா?! நாங்களும் எங்க ஸ்டைலில் களத்துல குதிப்போம்ல அப்படீன்னு குதிச்சுட்டாங்க. ஆனா அவனுங்களை மாதிரி கரண்டியும் ஜூசரும் வித்தா எங்க மரியாதை என்னாவறது. நாங்க வெறும் கயிறையே மந்திரக்கயிறுன்னு வித்துட மாட்டோமான்னு ரவுசை ஆரம்பிச்சுட்டாங்க.

பெண்: என் கணவர் நல்லா கள்ளச்சாராய வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தார். திடீர்னு போலீஸ் ரெய்டு அது இதுன்னு வியாபாரம் நொடிச்சு போயிடுச்சு. அப்போதான் என் ஃப்ரெண்ட் இந்த கயிறு பத்தி சொன்னா. வாங்கி சாராய பானையை சுற்றி கட்டியதும் ....

என்ன ஆச்சரியம் இப்பல்லாம் போலீஸ் ரெய்ட் வருவதே இல்லை. தண்ணியை கொதிக்க வச்சாலும் அது சாராயமா மாறிடுது. வியாபாரமும் கொடிகட்டி பறக்குது. எல்லாவற்றிற்கும் மந்திர கயிறுதான் காரணம்

பின்னணி குரல்: இந்த மந்திரக்கயிறு இமயமலையில் உள்ள பனியை கயிறாக திரித்து உருவாக்கப்பட்டதால் அற்புத சக்தி வாய்ந்தது. இதை உங்கள் வீட்டில் வைத்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். மண்சட்டி பொன்சட்டியாக மாறிவிடும். இந்த அற்புத மந்திரக்கயிறின் விலை வெறும் 4999ரூபாய் மட்டுமே.

உண்மையிலேயே மக்கள் இதெல்லாம் வாங்கறாங்களா?! எல்லா சேனலிலும் அரைமணிநேரம் ஓடுகிறது. இதற்கெல்லாம் பணம் கிடைக்கும் அளவு வியாபாரம் இருந்தால்தானே இது சாத்தியம்.

இதையெல்லாம் இன்னமுமா மக்கள் நம்பறாங்க! இவனுங்க நம்மளை லூசுன்னு நினைக்கறானுங்களா இல்லை அவனுங்கதான் மெய்யாலுமே லூசா?! சகோஸ் நீங்களே சொல்லுங்களேன்.

புதிய மொழி கற்றுக்கொள்ள எளிய வழி(ஆண்களுக்கு மட்டும்)

6 கருத்துகள்
அடுத்த மொக்கைக்கு ரெடியாகுங்கோ :-)

என்னவரோடு சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து ஒருவழியாக நாங்கள் இருக்கும் தீவுக்கு வந்து சேர்ந்தோம். இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் மிக மிக குறைவு இல்லை இல்லை மிக மிக அரிது.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அன்னிக்கு இரவு என்னவரின் பாஸ் வீட்டுக்கு போனோம். அங்க இருந்த மெய்ட் வயதான ஒரு அம்மா.பல வருடங்கள் என்னவருக்கும் அவருடன் வேலை
பார்ப்பவர்களுக்கும் சமைத்து கொடுப்பவர். அவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே எல்லாரும் நடத்துவாங்க. அவரிடம் "இனி இஸ்திரி கு" ன்னு ஏதோ சொன்னார். எனக்கோ தூக்கி வாரி போட்டுடுச்சு என்னடா நம்மளைக்காட்டி ப்ளாஸ்திரி இஸ்திரி பொட்டின்னு என்னவோ சொல்றாறேன்னு குழப்பம். நம்மாளு நான் குழம்பறதை பார்த்து ரசிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தார். மற்றவர்களும் இருந்ததால் நானும் எதுவும் கேக்கலை. நம்மளை வச்சு ஏதோ காமடி பண்றாரோன்னு நினைச்சுக்கிட்டேன். எப்படியும் நம்மக்கிட்ட மாட்டாமலா போவாருன்னு அப்போ வச்சுக்கலாம்னு மனசை தேத்திக்கிட்டேன்.

வீட்டுக்கு வந்தபின் என்ன சொன்னீங்கன்னு கேட்டா நீயே எப்படியாவது கண்டு பிடிச்சுக்கோன்னுட்டார். எனக்கு ரோஷம் வந்திடுச்சு. உங்க உதவி இல்லாம நான் இந்த மொழியை கத்துக்கறேன்னு சவால் விட்டுட்டேன். உள்ளுக்குள் உதறல்தான் :-). ஆனாலும் நமக்கு வீண் ஜம்பத்துக்கு சொல்லியா கொடுக்கணும்?!

அடுத்த நாள் காலையில் இவர் வேலைக்கு போயிட்டார். எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் மெய்ட் வந்தார். "இஸ்திரி சிஃபா யா?" ன்னு ஏதோ கேட்டார். ஆஹா எல்லாரும் சேர்ந்து நம்மளை இஸ்திரி பொட்டியாக்கிட்டாங்களேன்னு நொந்து போயிட்டேன். அன்னிக்கு மெய்ட் கிட்ட நல்லா கையை காலை ஆட்டி சைகை பாஷையில் பேசினேன். ஒருவழியா மெய்டும் சைகை பாஷையில் இஸ்திரின்னா மனைவி ன்னு அர்த்தம்னு சொல்லி புரிய வச்சுட்டாங்க. அடப்பாவிங்களா எங்கூருல அந்த காலத்துல ஸ்த்ரீன்னு சொல்றதைத்தான் நீங்க இஸ்திரின்னு கொன்னுட்டீங்களான்னு நினைச்சுக்கிட்டேன்.

சரி மனைவிக்கு இஸ்திரி, கணவருக்கு என்ன சொல்லனும்னு அவங்ககிட்டயே சைகையில் கேட்டேன். "சுவாமி" ன்னு சொல்லணும்னு சொன்னாங்க. ஆஹா இந்த பாஷை மொத்தமும் காப்பி போலத்தானோன்னு தோணுச்சுது! அவங்கக்கிட்டயே நம்பர்ஸ் மற்றும் சில அடிப்படை வார்த்தைகள்கள் கத்துக்கிட்டேன். இந்த பாஷையின் எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள் என்பதால் வாசிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனாலும் எழுத்துக்களின் ஒலியில் வித்தியாசம் இருப்பதால் கரெக்டாக உச்சரிப்பதில் பிரச்சினை. ஆனாலும் கண்ணில் பட்டதையெல்லாம் வாசிப்பேன்.

வாட்டர் பாட்டிலில் "Air minum" அப்படீன்னு எழுதி இருந்தது. உடனே எனக்கு மண்டையில் பல்ப் எரிஞ்சுட்டுது. "ஏர் மைனம்" னா தண்ணீர் அப்ப்டீன்னு முடிவு பண்ணிட்டேன். அடுத்த நாள் என் மேதாவித்தனத்தை மெய்டிடம் காட்ட அவரிடம் வாட்டர் பாட்டிலை காட்டி "ஏர் மைனம்" அப்படீன்னேன். என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஐர் மினும்" அப்படீன்னாங்க. இப்போ நான் திரு திருன்னு முழிச்சேன். என் மெய்ட் ரொம்ப புத்திசாலி (அது எப்படி கவி எல்லாரும் உன்னைவிட புத்திசாலியாவே இருக்காங்க!). நான் முழிக்கறதை பார்த்ததுமே ஒவ்வொரு வார்த்தையிலும் கை வைத்து "ஐர்" "மினும்" அப்படீன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதோட நிறுத்தாம தண்ணீரை ஒரு கப்பில் ஊற்றி
"ஐர்" அப்பட்டீனு சொல்லி "மினும்" னு சொல்லி குடிச்சு காமிச்சாங்க. ஐர் னா தண்ணி மினும் னா குடி அப்படீன்னு புரிஞ்சுது. இதத்தானே எங்க ஊர் ரெயில்வே ஸ்டேஷனில் குடி தண்ணீர்னு எழுதி பக்கத்துலயே ஒரு கப்பை செயினால் கட்டிப் போட்டிருப்பாங்க. இதுக்குத்தானா இம்புட்டு அலப்பறை அதையும் தலைகீழா சொல்லிப்புட்டு அப்படீன்னு மனசுக்குள்ளயே கறுவிக்கிட்டேன்.

என் கணவரின் நண்பர் முப்பது நாட்களில் ஹிந்தி புத்தகம் போல் பஹாஸா இந்தோனேசியா பேசுவது எப்படீன்னு ஒரு புத்தகம் கொடுத்தார். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை :-(. இப்படியே போனா சைகை பாஷைதான் நல்லா கத்துக்குவேன்னு மட்டும் புரிஞ்சுது. உடனே ஒரு பஹாசா இந்தோனேசியா-ஆங்கிலம், ஆங்கிலம்-பஹாசா இந்தோனேசியா அகராதி வாங்கி வைத்துக் கொண்டேன்.

தினமும் அதைப்பார்த்து புதிய புதிய வார்த்தைகளாக படித்தேன். வாசலில் யார் வந்தாலும் அவர்கள் பேசுவதைக் கேட்டு டிக்ஷ்னரியில் அர்த்தம் தேடி அதற்கு பதில் சொல்ல மீண்டும் டிக்ஷ்னரியில் வார்த்தை தேடி பதில் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொழியைக் கத்துக்கிட்டேன். இப்போ ஓரளவு நல்லாவே பேசுவேன். ஆனால் என்ன சைகை பாஷைதான் மறந்து போச்சு :-( .

இந்த பாஷை கற்றுக் கொள்ள எளிதுதன். ஏன்னா கிராமர்னு ஒண்ணு கிடையவே கிடையாது. கொஞ்சம் தமிழ் கொஞ்சம் ஹிந்தி கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் டச்சு மொழி எல்லாம் கலந்ததுதான் இந்த மொழி. என்ன நாம் பேசறதை கொஞ்சம் ரிவர்சில் பேசணும் அவ்வளவுதான். இங்கே திரும்புன்னு சொல்லணுமான திரும்பு இங்கேன்னு சொல்லணும் அவ்வளவுதான். நம்பர்ஸ் எழுதும் போது புள்ளி வக்கிற இடத்தில் "கமா" போடனும் கமா போடற இடத்தில் புள்ளி வைக்கணும். இப்படி எல்லாத்தையும் தலைகீழாத்தான் செய்யணும் (-:.

இப்படி நான் கஷ்டப்பட்டு இந்த பாஷையை கத்துக்கிட்டா... என்னவரிடமும் அவரது இந்திய நண்பர்களிடமும் நீங்கள்லாம் எப்படி சீக்கிரமா கத்துக்கிடீங்கன்னு கேட்டா குறும்பா சிரிச்சுக்கிட்டு ஒரு பதில் சொன்னாங்க பாருங்க....நான் கண்ணாலயே என்னவரை
பொசுக்கிட்டேன். "ஹி..ஹி... இங்க வந்த உடனேயே ஒவ்வொருத்தரும் கம்பெனியில்
உள்ள பொண்ணுங்களை ஆளுக்கொண்ணா பிடிச்சு கேர்ள் ஃப்ரெண்டாக்கிட்டோம். சீக்கிரமா கத்துக்கிட்டோம்" இதுதான் அவங்க சொன்ன பதில்.

அடப்பாவிங்களா கேர்ள் ஃப்ரண்ட் வச்சுக்கறத்துக்கு இப்படீல்லாமா காரணம் கண்டுபுடிப்பீங்க!

காதலர் தினத்தில் கிடைத்த அன்பு

6 கருத்துகள்
கல்லூரியில் சேரும் வரை வேலன்டைன் டே அப்படீன்னு ஒன்னு இருக்கறதே எனக்கு தெரியாது :-(. அம்புட்டு பொது அறிவு நமக்கு :-). முதலாம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிதான் அடுத்த நாள் வேலன்டைன் டே என்ற பேச்சு கல்லூரி முழுக்க எல்லாரும் பேசிக்கிட்டாங்க . என் வகுப்புத்தோழியிடம் அப்பாவியாக வேலன்டைன் டேன்னா என்னான்னு கேட்டேன். அடிப்பாவி இது கூடவா தெரியாதுன்னு அற்பமா ஒரு பார்வை பார்த்தா பாருங்க... ஒரு புழுவைப்போல் நெளிய வச்சுட்டா. அப்புறம் சொன்னா நாளைக்கு லவ்வர்ஸ் டே அதைத்தான் அப்படி சொல்றாங்க அப்படீன்னா. அப்படியா அப்படீன்னா நாளைக்கு நமக்கு வேலையில்லன்னு போயிட்டேன்.

அதுக்கப்புறம் லவ்வர்ஸ் டே பற்றி வித விதமான செய்திகள்(வதந்திகள்) உலா வந்தன. பேனா பரிசாக கொடுத்தா காதலன் பிரிஞ்சு போயிடுவான். கர்ச்சீஃப் கொடுத்தா காதலி உன்னை கைகழுவிட்டு கர்ச்சீஃப்ல கை துடைச்சுக்குவா. மஞ்சள் ரோஸ் தலையில் வச்சுக்கிட்டா இன்னும் ஃப்ரீயாத்தான் இருக்கேன். ரெட் ரோஸ் வச்சுக்கிட்டா ஏற்கெனவே ஆள் இருக்கு. வெள்ளை ரோஸ் வச்சுக்கிட்டா காதல் முறிஞ்சு போயிடுச்சு அப்பட்டீன்னு அர்த்தம்ம்னு ஒவ்வொன்னுக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டு ஒரு கூட்டம் அலைஞ்சுது அப்புறம் ஒவ்வொரு கலர் ட்ரெஸுக்கும் ஒவ்வொரு அர்த்தம்னு சொல்லி அடுத்த நாள் என்ன கலர் ட்ரெஸ் போடறதுன்னு மண்டையை சொறிய வச்சிட்டு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு திரிஞ்சுது. இதையெல்லாம் கேட்டு எங்கள் ஐவர் அணி தோழிகள் பட்டாளத்துக்கு ஒரே குழப்பம். ஏன்னா எங்களில் யாருக்கும் அதுவரை காதலும் இல்லை. இனிமேல் கல்லூரியில் யாரையும் காதலிக்கும் எண்ணமும் இல்லை.

எந்த கலரில் ட்ரெஸ் போட்டாலும் அதுக்கு வில்லங்கமான அர்த்தம் இருக்குன்னு வேற ஒரு கூட்டம் திரிஞ்சுக்கிட்டு இருந்ததா... நாங்களெல்லாம் கூட்டம் போட்டு ஏகமனதாக ஒரு முடிவு செய்தோம். கறுப்பு கலர் சுடிதார் போட்டு சிவப்பு நிற ரோஜாவை தலையில் வைத்து செல்வதென முடிவு செய்தோம். அதாவது பசங்களை குழப்பறதா எங்களுக்கு நினைப்பு. என்ன பண்றது எப்பவுமே நெனப்புதானே பொழப்ப கெடுக்கறது
சரி சுடிதார் பிரச்சினை இல்லை. கறுப்பு நிற சுடிதார் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் சிவப்பு நிற ரோஸ் வேண்டுமே! சிவப்பு ரோஜா கிடைப்பது அன்று குதிரை கொம்பாக இருந்தது. இந்த பசங்க மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டானுங்கன்னு எங்க காலேஜ் பக்கம் பூக்கடை வச்சிருக்கற அக்கா கையை விரிச்சுட்டாங்க :-). ஒரு ரோஜாக்கு 20ரூபாய் கொடுப்பதாக இருந்தால் அடுத்த நாள் காலை கொண்டு வந்து தருவதாக சொல்லி எங்கக்கிட்ட அக்கா நால்லாவே வியாபாரம் செய்துட்டாங்க. பின்னே பிசினஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ் இருக்கும் கல்லூரியின் வாசலில் கடை வச்சிருக்கற அக்காவுக்கு இந்த வியாபார தந்திரம் கூடவா தெரியாது.

லவ்வர்ஸ் டேயும் விடிந்தது. வீட்டிலிருந்து கறுப்பு சுடிதார் போட்டுக்கிட்டு போய் கல்லூரிப் பேருந்தில் ஏறினால் முக்கால் வாசி புள்ளைகளும் மஞ்சள் சுடிதாரும் முக்கால் வாசி பசங்களும் மஞ்சள் ஷர்ட்டும் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. ஏற்கெனவே ஜோடி சேர்ந்தவங்க மட்டும் சிவப்பு ட்ரெஸ் போட்டு சிவப்பு ரோசை தலையில் வைத்து பந்தா காட்டிக்கிட்டு நல்லா கடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. மஞ்சள் மங்கம்மாக்களும் மஞ்ச சட்டை ராமராஜன்களும் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க... அய்யோ இவ்வளவு சின்ன வயசுலயே காதல் தோல்வியா பாவம் புள்ளன்னு ஒரு பரிதாப பார்வை வீசிட்டு தனக்கேத்த ஜோடியை தேட ஆரம்பிச்சுட்டாங்க. மனதுக்குள் சிரித்துக் கொண்டு அப்பாவியாக சீட்டில் உட்காந்துகிட்டு யார் யாருக்கு நூல் விடறாங்கன்னு நோட் பண்ணிக்கிட்டு இருந்தேன் :-)

இப்படியாக அன்னிக்கு எல்லோரும் ஏதோ திருவிழாவிற்கு போவது போல் காலேஜ் போய் சேர்ந்தோம். பூக்கார அக்கா சொன்ன மாதிரியே சிவப்பு ரோஜா கொண்டு வந்து கொடுத்திட்டாங்க. ஜோரா தலையில் வச்சுக்கிட்டு க்ளாசுக்கு போயாச்சு.

மாணவமணிகள் இப்படி ஜாலி மூடில் காலேஜுக்கு வர ஆசிரிய மணிகள் எல்லாம் கொலை வெறியில் இருந்தார்கள். எந்த மாணவி தலையில் சிவப்பு ரோஜா இருந்தாலும் அவர்களை கொத்திவிடுவது போலவே முறைத்தார்கள். வேற ஒன்னும் இல்லை நாம படிக்கிற போது இதெல்லாம் இல்லியேங்கற வயித்தெரிச்சல்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆனால் எங்கள் டீமை பார்த்ததும் குழம்பிட்டாங்க! ஹேய் சக்சஸ்னு மனசுகுள்ளயே சொல்லிக்கிட்டு அப்பாவியா கிளாசுக்கு போயிட்டோம். எங்கள் மேத்ஸ் மேடம் க்கு மட்டும் என்ன தோனுச்சுன்னு தெரியலை எங்க அஞ்சு பேரையும் கூப்பிட்டு என்ன தலையில் ரெட் ரோஸ் கறுப்பு சுடிதார்னு கேட்டாங்க. எங்களுக்கோ அவங்களைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏன்னா அவங்க கறுப்பு சேலை உடுத்தி தலையில் ஒரு சிவப்பு ரோஜா வச்சிருந்தாங்க :-). சும்மா பசங்களை குழப்பத்தான் இப்படீ அப்படீன்னு மேடத்துக்கிட்ட சொன்னதும் மேடம் சிரிச்சுட்டாங்க. எங்களில் இருந்த குறும்புக்கார தோழி மேடம் நீங்க ஏன் மேடம் கறுப்பு சேலை சிவப்பு ரோஜான்னு வந்திருக்கீங்க சார் மேல என்ன கோபம் அப்படீன்னு கேட்டா(மேம் க்கு அந்த வருடம்தான் திருமணம் ஆகியிருந்தது). அடிப்பாவிங்களா குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மா இப்படி காம்பினேஷனுக்கு ஏதோ அர்த்தம் இருக்கு போல இருக்கேன்னு உங்க ஐவர் அணியை பார்த்ததும்தான் தெரிஞ்சுது. நாம வேற அந்த காம்பினேஷன்ல வந்திருக்கோமே ஏதோ வில்லங்கமான அர்த்தமா இருக்குமோன்னு தெரிஞ்சுக்கதான் உங்களைக் கூப்பிடவே செய்தேன்னு சொல்லி சிரிச்சாங்க. அதுக்கப்புறம் மேம் மின் செல்லக்குழந்தைகளாகி விட்டோம். இப்படி காதலர் தினம் எங்களுக்கு ஆசிரியையின் அன்பைப் பெற்றுத் தந்தது.


காதலர் தினத்துக்கு மொக்கை போடாட்டி நமக்கு தூக்கம் வராதேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ நிம்மதியா இருக்கு இனிமே என்னவரோடு வேலன்டைன் சந்தோஷமா கொண்டாட போகலாம் :-)

திருப்பதி பாலாஜியின் தெய்வீகப் படங்கள்

4 கருத்துகள்
திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியின் வைகுண்ட ஏகாதசி படங்கள் எனக்கு மெயிலில் வந்தது. படங்கள் மிக மிக அழகு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கோவிந்தரின் தெய்வீக புன்னகை




ஸ்ரீ பாலாஜியின் தாமரைப் பாதங்கள்




ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாச கோவிந்தா




ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணசந்திரா